ரஞ்சி கிரிக்கெட்: மும்பையை வீழ்த்தியது உத்தரபிரதேசம்


ரஞ்சி கிரிக்கெட்: மும்பையை வீழ்த்தியது உத்தரபிரதேசம்
x
தினத்தந்தி 29 Jan 2024 8:45 PM GMT (Updated: 29 Jan 2024 8:45 PM GMT)

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் உத்தரபிரதேச அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.

மும்பை,

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

இதில் 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள 41 முறை சாம்பியனான மும்பை அணி, தனது 4-வது லீக் ஆட்டத்தில் உத்தரபிரதேசத்துடன் மோதியது. இந்த 4 நாள் ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் மும்பை 198 ரன்னும், உத்தரபிரதேசம் 324 ரன்னும் எடுத்தன. 126 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய மும்பை அணி 3-வது நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 303 ரன்கள் எடுத்து இருந்தது.

4-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய மும்பை 320 ரன்னில் ஆல்-அவுட் ஆகி 195 ரன்களை உத்தரபிரதேசத்துக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதனை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய உத்தரபிரதேச அணி 69.5 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றியை சுவைத்தது. தொடக்க வீரர் ஆர்யன் ஜூயல் (76 ரன்), கரண் ஷர்மா (67 ரன், நாட்-அவுட்) அரைசதம் அடித்தனர்.

முதல் இன்னிங்சில் சதம் அடித்த உத்தரபிரதேச அணியின் கேப்டன் நிதிஷ் ராணா ஆட்டநாயகன் விருது பெற்றார். முதல் 3 ஆட்டங்களில் 'டிரா' கண்டு இருந்த உத்தரபிரதேச அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். முதல் 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்த மும்பை அணிக்கு இது முதல் தோல்வியாகும்.


Next Story