பெண்கள் பிரீமியர் லீக்: மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பெங்களூரு


பெண்கள் பிரீமியர் லீக்: மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பெங்களூரு
x

பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டிக்குள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நுழைந்துள்ளது.

டெல்லி,

2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

கடைசி இரு இடங்களை பிடித்த உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

அதேவேளை, இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான வெளியேற்றுதல் சுற்றில் லீக் சுற்றில் 2-வது, 3-வது இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இன்று மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி , முதலில் களமிறங்கிய பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் எல்லிஸ் பெர்ரி அதிகபட்சமாக 66 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து, 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை 19 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்தது. மும்பை வெற்றிபெற கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. 19.5 ஓவரில் மும்பை 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. கடைசி பந்தில் மும்பை வெற்றிபெற 7 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், மும்பை கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்தது.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை 6 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், மும்பை இந்தியன்சை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்குள் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் நுழைந்துள்ளது.

டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மோதுகின்றன.


Next Story