இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு அன்புப் பரிசு வழங்கிய ஷாகின் அப்ரிடி...!!


இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு அன்புப் பரிசு வழங்கிய ஷாகின் அப்ரிடி...!!
x

இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி பரிசு வழங்கிய சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு,

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இவரும் தொலைக்காட்சி தொகுப்பாளரான சஞ்சனா கணேசனும் காதலித்து சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த நிலையில், கடந்தாண்டு இறுதியில் சஞ்சனா கணேசன் கர்ப்பமானார். இந்த நிலையில் இவர்களுக்கு செப்.4ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறப்பின் போது மனைவியுடன் இருப்பதற்காக நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து பும்ரா விலகினார். குழந்தை பிறப்புக்கு பின்னர் இந்திய அணியுடன் பயிற்சியில் இணைந்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பும்ரா அணியில் இடம்பிடித்து இருந்தார்.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து விளையாடிய போது, திடீரென மழை பெய்தது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின் கள நடுவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்தபோது மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் போட்டி நேற்று ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர்4 சுற்று ஆட்டம் இன்று (ரிசர்வ் டே) நடைபெற உள்ளது. விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் களத்தில் உள்ளனர். இன்று மாலை 3 மணிக்கு ஆட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி இந்திய அணியின் பும்ராவை சந்தித்தார். அப்போது ஷாகின் அப்ரிடி, அண்மையில் தந்தையான பும்ராவுக்கு அன்பு பரிசு ஒன்றை வழங்கினார். இதனால் நெகிழ்ச்சியடைந்த பும்ரா, ஷாகின் அப்ரிடிக்கு நன்றி கூறினார். இருவரும் ஒருவருக்கொருவர் கைக்குலுக்கி கொண்டனர்.

இந்த வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பக்கத்தில் பகிர்ந்த நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் சகோதரர்களாக அன்பை பரிமாறிக் கொள்வது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story