இலங்கை அபார பந்துவீச்சு...முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 188 ரன்களில் ஆல் அவுட்

image courtesy: twitter/@ICC
வங்காளதேசம் - இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
சில்ஹெட்,
இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கையும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேசமும் கைப்பற்றின.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹெட்டில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 280 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக தனஞ்சயா டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் சதமடித்து அசத்தினர். வங்காளதேச அணி தரப்பில் அதிகபட்சமாக கலீத் அகமது மற்றும் நஹித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம், இலங்கை அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 188 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக தைஜுல் இஸ்லாம் 47 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் விஷ்வா பெர்னண்டோ 4 விக்கெட்டுகளும், கசூன் ரஜிதா மற்றும் லஹிரு குமாரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.






