சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம்... ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை அபார வெற்றி


சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம்... ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை அபார வெற்றி
x

image courtecy:twitter@IPL

தினத்தந்தி 6 May 2024 5:49 PM GMT (Updated: 6 May 2024 5:59 PM GMT)

மும்பை அணி 7விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 48 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, தொடக்கத்தில் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியில் ரோகித் சர்மா 4 ரன்களிலும், இஷான் கிஷன் 9 ரன்களிலும் அவுட் ஆகினர். அதனையடுத்து களமிறங்கிய நமன், ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். பின்னர் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். சூர்யகுமார் யாதவ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து சதம் அடித்தார்.

முடிவில் மும்பை 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் மும்பை அணி 7விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

மும்பை தரப்பில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 102 ரன்களும் திலக் வர்மா 37 ரன்களும் எடுத்தனர். ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார், கம்மின்ஸ் மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.


Next Story