டி20 உலகக் கோப்பை: தென் ஆப்பிரிக்கா அணியிடம் போராடி வீழ்ந்தது இந்திய அணி


டி20 உலகக் கோப்பை: தென் ஆப்பிரிக்கா அணியிடம் போராடி வீழ்ந்தது இந்திய அணி
x

இறுதி வரை போராடிய இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

பெர்த்,

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது . இந்த தொடரில் பெர்த்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியா-தென்ஆப்பிரிக்கா (குரூப் 2) அணிகள் விளையாடின.

இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் ரோகித் சர்மா கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா- கே.எல் ராகுல் களமிறங்கினர். முதல் ஓவரை எதிர்கொண்ட கே.எல் ராகுல் அந்த ஓவரில் ஒரு ரன் கூட சேர்க்கவில்லை.

தென் ஆப்பிரிக்கா அணியின் சிறப்பான பந்துவீச்சால் பவர்பிளேவில் இந்திய அணியால் அதிரடி காட்ட முடியவில்லை. மாறாக நிகிடி வீசிய 5-வது ஓவரில் ரோகித் சர்மா 15 ரன்களிலும், ராகுல் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி பவர்பிளே முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்து இருந்தது.

இதை தொடர்ந்து நிகிடி வீசிய 7-வது ஓவரில் கோலி 12 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதை தொடர்ந்து தீபக் ஹூடா டக் அவுட்டாகியும், ஹர்திக் பாண்டியா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 49 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது.

இதன்பின் சூர்யகுமார் யாதவ்- தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தனர். ஒருபுறம் தினேஷ் அதிக டாட் பந்துகளை விளையாட சூர்யகுமார் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து 15 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தினேஷ் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அஸ்வின் தனது பங்கிற்கு 7 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.

ஒருபுறம் விக்கெட்கள் சரிந்தாலும் சூர்யகுமாரின் அதிரடியால் இந்திய அணி மிகப்பெரிய சரிவில் இருந்து மீண்டது. அவர் 40 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நிகிடி 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

இதையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. அதிரடி தொடக்க வீரர் டி காக் 1 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அர்ஷ்தீப் சிங் வீசிய 2-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அதே ஓவரில் ரோசோவ் டக் அவுட்டானார்.

கேப்டன் பவுமா 10 ரன்களில் சமி பந்துவீச்சில் அவுட்டானார். அர்ஷ்தீப் அபார பந்துவீச்சால் பவர்பிளேவில் தென் ஆப்பிரிக்கா அணி 24 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து திணறியது. இதன் பிறகு ஜோடி சேர்ந்த ஏடன் மார்க்ரம்- டேவிட் மில்லர் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டு ரன்கள் குவித்தனர். குறிப்பாக பவுண்டரி மழைகளை பொழிந்த மார்க்ரம் 39 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

போட்டியின் 16-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் மார்க்ரம் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மில்லர் ஒருமுனையில் பொறுப்பான அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார்.

இதனால் தென் ஆப்பிரிக்கா அணி பரபரப்பான கடைசி ஓவரில் 2 பந்துகள் மீதம் இருக்க 137 ரன்கள் அடித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மில்லர் ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் எடுத்தார் (46 பந்துகள்). இன்று இறுதி வரை போராடிய இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் தோல்வியை சந்தித்துள்ளது. தற்போது 5 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா அணி குரூப் பி பிரிவில் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.


Next Story