இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் - புதிய கேப்டனாக பும்ரா நியமனம்


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் - புதிய கேப்டனாக பும்ரா நியமனம்
x

கபில்தேவுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தும் வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பை பும்ரா பெற உள்ளார்.

பர்மிங்காம்,

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை (இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு) தொடங்குகிறது. இதையொட்டி அங்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஓட்டல் அறையிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு மீண்டும் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோனையில் கொரோனா தாக்கம் இன்னும் குறையவில்லை என்பது கண்டறியப்பட்டது. இதனால் தொடர்ந்து தனிமையில் உள்ள அவருக்கு நாளைக்குள் மேலும் இருமுறை சோதனை நடத்தப்படுகிறது. தற்போதைய சூழலில் அவர் முக்கியமான இந்த டெஸ்டில் விளையாட வாய்ப்பில்லை என்பது தெரியவந்துள்ளது.

துணை கேப்டன் லோகேஷ் ராகுல் காயத்தால் ஏற்கனவே விலகி விட்டார். எனவே ரோகித் சர்மாவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியின் கேப்டனாக பணியாற்றுவார் என்று கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

28 வயதான பும்ரா இதற்கு முன்பு எந்த அணிக்கும் கேப்டனாக இருந்ததில்லை. மேலும் 1987-ம் ஆண்டு கபில்தேவுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தும் வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பையும் அவர் பெற உள்ளார்.


Next Story