அவர் கொடுத்த நம்பிக்கைதான் 5 விக்கெட்டுகள் எடுக்க காரணம் - அர்ஷ்தீப் சிங்


அவர் கொடுத்த நம்பிக்கைதான் 5 விக்கெட்டுகள் எடுக்க காரணம் - அர்ஷ்தீப் சிங்
x

image courtesy; AFP

தினத்தந்தி 17 Dec 2023 2:05 PM GMT (Updated: 17 Dec 2023 2:47 PM GMT)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஜோகன்ஸ்பர்க்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. அதன்படி இன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை இந்திய பந்து வீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங் மற்றும் அவேஷ் கான் வரிசையாக வீழ்த்தினர்.

வெறும் 27.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க அணி 116 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் 5 விக்கெட்டுகளும், அவேஷ் கான் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக ஆண்டிலே பெஹ்லுக்வாயோ 33 ரன்கள் அடித்தார்.

இதனையடுத்து 117 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கி இந்திய அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 117 ரன்கள் அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக அறிமுக வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் 55 ரன்கள் அடித்து அசத்தினார். 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய அர்ஷ்தீப் சிங் இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் கே.எல்.ராகுல் கொடுத்த நம்பிக்கைதான் 5 விக்கெட்டுகள் எடுக்க காரணம் என்று அர்ஷ்தீப் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "சற்று சோகமாக உணர்ந்து வந்த நான் தற்போதைய தருணத்தை விரும்புகிறேன். இதற்கு கடவுள் மற்றும் அணி நிர்வாகத்திற்கு நன்றிகள். இது மற்ற மைதானங்களை விட சற்று வித்தியாசமாக இருந்ததால் நான் நன்றாக மூச்சை விட்டு ஓடினேன். இந்த நேரத்தில் நான் கே.எல்.ராகுலுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் அவர் உன்னால் கம்பேக் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுக்க முடியும் என்று நம்பிக்கை கொடுத்தார். அவர் கொடுத்த நம்பிக்கைதான் 5 விக்கெட்டுகள் எடுக்க காரணம். அடுத்து வரும் போட்டிகளில் மைதானங்களை பார்த்து அதற்கேற்றவாறு நாங்கள் கவனம் செலுத்தி விளையாட உள்ளோம்" என்று கூறினார்.


Next Story