என்னுடைய சிறப்பான பந்துவீச்சுக்கு இதுவே காரணம் - பும்ரா பேட்டி


என்னுடைய சிறப்பான பந்துவீச்சுக்கு இதுவே காரணம் - பும்ரா பேட்டி
x

image courtesy; twitter/ @BCCI

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

விசாகப்பட்டினம்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 209 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தனர். அதிலும் குறிப்பாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை விரைவாக கைப்பற்றி அசத்தினார்.

முடிவில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 253 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாக் கிராலி 76 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அபாரமாக பந்து வீசிய பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இந்நிலையில் இன்றைய இரண்டாம் நாள் போட்டி முடிந்து தனது சிறப்பான பந்துவீச்சு குறித்து அளித்த பேட்டியில் பேசிய பும்ரா கூறுகையில்;- 'எப்பொழுதுமே ஒரு போட்டியில் நாம் விக்கெட்டுகளை எடுக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். இந்தியாவில் ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்த நமக்கு இங்கு அந்த சாதகத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரியும்.

நான் ஏற்கனவே பல மகத்தான இந்திய பவுலர்கள் இதே போன்ற பந்துவீச்சை வெளிப்படுத்தி பார்த்திருக்கிறேன். அதனையே இந்த போட்டியில் செய்தும் பார்த்தேன். நான் இந்த போட்டியில் ரிவர்ஸ் ஸ்விங் செய்யும்போது எனக்கு நல்ல ஹெல்ப் கிடைத்தது. அதிலும் குறிப்பாக போப் விக்கெட் விழுந்ததிலிருந்து என்னுடைய நம்பிக்கையும் அதிகரித்தது' என்று கூறினார்.


Next Story