உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுக்காக இவர் தான் அதிக ரன் அடிப்பார் - ஹர்பஜன் சிங்


உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுக்காக  இவர் தான் அதிக ரன் அடிப்பார் - ஹர்பஜன் சிங்
x

Image Courtesy: AFP

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.

அகமதாபாத்,

10 அணிகள் கலந்து கொண்ட 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்களில் இந்திய அணி நியூசிலாந்தையும், ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் சுப்மன் கில் தான் இந்தியாவுக்காக அதிக ரன் அடிப்பார் என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

விராட் கோலி மற்றும் முகமது ஷமி ஆகியோர் நம்ப முடியாத அளவுக்கு ஒவ்வொரு போட்டியிலும் அசத்தி வருகின்றனர். இது சுப்மன் கில்லுக்கு மிகவும் பிடித்த மைதானமாகும். அவர் எப்போதுமே அகமதாபாத்தில் ரன்கள் அடிக்க விரும்புவார். இறுதிப்போட்டியில் அவர் பெரிய ரன்களை எடுப்பார் என்று கணிக்கிறேன்.

அவர் ஐபிஎல் இறுதிப்போட்டியில் அதிக ரன்கள் அடிப்பார் என்று நான் கணித்திருந்தேன். தற்சமயத்தில் இந்தியா பயமற்ற கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. இருப்பினும் இறுதிப்போட்டி என்பது எப்போதுமே அழுத்தமான போட்டியாக இருக்கும். அதில் யார் அழுத்தத்தை சரியாக கையாள்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story