உலகக்கோப்பை கிரிக்கெட்; ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் விளையாட மாட்டார் - பிசிசிஐ அறிவிப்பு


உலகக்கோப்பை கிரிக்கெட்; ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் விளையாட மாட்டார் - பிசிசிஐ அறிவிப்பு
x

Image Courtesy: @BCCI

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5ம் தேதி அகமதாபாத்தில் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தை சென்னையில் நேற்று ஆடியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை டெல்லியில் வரும் 11-ம் தேதி சந்திக்க உள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் விளையாடுவது சந்தேகம் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் வரும் 11-ம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் பங்கேற்கமாட்டார் எனவும், அவர் சென்னையில் தங்கி மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பார் எனவும் பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் விளையாட மாட்டார் என்பதால் இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வாய்ப்பு உள்ளது.


Next Story