உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்தியா - கத்தார் அணிகள் இன்று மோதல்


உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்தியா - கத்தார் அணிகள் இன்று மோதல்
x

image courtesy; AFP

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் 3-வது சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாகும்.

புவனேஸ்வர்,

ஆண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2026ஆம் ஆண்டில் நடைபெற உள்ளது. அதற்கான ஆசிய மண்டல தகுதி சுற்றின் 2-வது சுற்றில் 36 அணிகள் பங்கேற்று உள்ளன. அவை 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா 2 முறை லீக்கில் மோதுகின்றன. இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 3-வது சுற்றுக்கு முன்னேறும். 2-வது சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்றன.

இந்தியா 'ஏ' பிரிவில் கத்தார், குவைத் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இதில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி குவைத் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் பலம் வாய்ந்த கத்தார் அணியுடன் இன்று மோத உள்ளது. 'ஏ' பிரிவின் புள்ளி பட்டியலில் கத்தார் அணி முதலிடத்திலும், இந்திய அணி 2-வது இடத்திலும் உள்ளன. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் 3-வது சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாகும். இதனால் இந்திய வீரர்கள் தங்களால் முடிந்த வரை போராட தயாராகி வருகின்றனர்.

இந்த ஆட்டம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.


Next Story