புரோ ஆக்கி லீக்; சீனாவுக்கு எதிராக இந்திய மகளிர் அணி தோல்வி


புரோ ஆக்கி லீக்; சீனாவுக்கு எதிராக இந்திய மகளிர் அணி தோல்வி
x

image courtesy; twitter/@TheHockeyIndia

தினத்தந்தி 14 Feb 2024 12:32 PM GMT (Updated: 14 Feb 2024 12:33 PM GMT)

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த நெதர்லாந்துடன் இன்று மோத உள்ளது.

ரூர்கேலா,

மகளிருக்கான 5-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகிறது. இதில் இந்தியா, சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரின் சில லீக் ஆட்டங்கள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட லீக் ஆட்டங்கள் ஒடிசாவில் உள்ள ரூர்கேலாவில் நடைபெற்று வருகின்றன.

இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய முதல் 4 ஆட்டங்களில் சீனா, நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியும், அமெரிக்காவுக்கு எதிராக வெற்றியும் கண்டிருந்தது.

இதனையடுத்து இந்தியா தனது 5-வது லீக் ஆட்டத்தில் சீனாவுடன் நேற்று மோதியது. இதில் ஆட்டம் தொடங்கிய 7-வது நிமிடத்திலேயே இந்தியா கோல் அடித்து முன்னிலை பெற்றது. இருப்பினும் இந்த முன்னிலை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 14-வது நிமிடத்தில் சீனா பதில் கோல் திருப்பி சமநிலைக்கு கொண்டு வந்தது. பிற்பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சியில் சீனாவுக்கே பலன் கிட்டியது.

முழுநேர ஆட்ட முடிவில் சீனா 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் சங்கீதா குமாரி மட்டுமே ஒரு கோல் அடித்தார். சீனா தரப்பில் கு பிங்பெங் 2 கோல் அடித்து அணி வெற்றி பெற உதவினார்.

இதனையடுத்து இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த நெதர்லாந்துடன் இன்று மோத உள்ளது.


Next Story