உலக, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது கடினமானது - தடகள வீராங்கனை டுட்டீ சந்த்


உலக, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது கடினமானது - தடகள வீராங்கனை டுட்டீ சந்த்
x
தினத்தந்தி 17 July 2019 11:52 PM GMT (Updated: 17 July 2019 11:52 PM GMT)

‘உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது கடினமானது’ என்று இந்திய தடகள வீராங்கனை டுட்டீ சந்த் தெரிவித்தார்.

புதுடெல்லி,

இத்தாலியில் கடந்த வாரம் நடந்த உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை டுட்டீ சந்த் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக பல்கலைக்கழக போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். ஒடிசாவை சேர்ந்த 23 வயதான டுட்டீ சந்த் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

என்னுடைய தன்பாலின தொடர்பு குறித்து வெளிப்படையாக தெரிவித்த பிறகு நிறைய பேர் மோசமான வார்த்தைகளால் என்னை விமர்சித்தனர். எனது தடகள வாழ்க்கை முடிந்து விட்டதாகவும், என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தலாம் என்றும் கருத்து தெரிவித்து இருந்தனர். அவர்களுக்கெல்லாம் இன்னும் எனது தடகள வாழ்க்கை முடிந்துவிடவில்லை என்பதை தெரியப்படுத்த விரும்புகிறேன்.

மற்றவர்களை போல் நானும் எனது சொந்த வாழ்க்கை குறித்து சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதனால் தான் கிராமத்து பெண்ணுடனான என்னுடைய தன் பாலின உறவை வெளிப்படையாக தெரிவித்தேன். இதனால் எனது தடகள வாழ்க்கையை புறக்கணிப்பதாக அர்த்தம் கிடையாது. எனக்கு என்ன தேவை என்று நினைத்தேனோ அதனை நான் செய்து இருக்கிறேன். தற்போது நான் முன்பை விட தடகள வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.

உலக அளவிலான போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் நான் தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். எனது தடகள வாழ்க்கையில் இது தான் உயரிய வெற்றியாகும். அடுத்து எனக்கு கடும் சவால் காத்து இருக்கிறது. இந்த ஆண்டு நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் அடுத்த ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டி ஆகியவற்றுக்கு தகுதி பெறுவதே எனது இலக்காகும். முந்தைய போட்டிகளை மறந்து அடுத்து வரும் முக்கியமான போட்டிகளில் தான் எனது கவனம் உள்ளது.

உலக மற்றும் 2020 ஒலிம்பிக் போட்டிக்கு நான் இதுவரை தகுதி பெறவில்லை. இந்த முறை இந்த போட்டிகளுக்கு தகுதி பெற நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் நேரத்தின் அளவு மிகவும் கடினமானதாகும். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதி இலக்கை (11.24 வினாடி) எட்டுவதற்கு வசதியாக ஆசியா மற்றும் ஐரோப்பாவில் நடைபெறும் சில தடகள போட்டிகளில் பங்கேற்க தனக்கு வழிவகை செய்து தரும்படி இந்திய தடகள சம்மேளனத்திடம் கேட்டு இருக்கிறேன். அவர்களும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டி முக்கியமான இலக்காகும். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் நான் சிறப்பாக செயல்படவில்லை. அடுத்த ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் முதலில் நான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வேண்டும். தகுதி இலக்கை எட்டுவது என்பது எளிதான காரியம் அல்ல. இந்த முறை தகுதி இலக்குக்கான நேரம் (11.15 வினாடி) கடினமாக இருக்கும் வகையில் குறைக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

டுட்டீ சந்த் 2016-ம் ஆண்டில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11.24 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தேசிய சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story