ஒலிம்பிக்; கூடைப்பந்து தகுதி சுற்று போட்டியில் இந்தியா தோல்வி


ஒலிம்பிக்; கூடைப்பந்து தகுதி சுற்று போட்டியில் இந்தியா தோல்வி
x
தினத்தந்தி 15 Aug 2023 12:23 PM GMT (Updated: 15 Aug 2023 12:25 PM GMT)

ஒலிம்பிக் கூடைப்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 70-73 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தான் அணியிடம் வீழ்ந்தது.

டமாஸ்கஸ்,

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் நடைபெற உள்ள கூடைப்பந்து போட்டிக்கு தகுதி பெற ஆசிய அணிகளுக்கான முதற்கட்ட தகுதி சுற்று ஆட்டங்கள் சிரியாவில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, பக்ரைன், கஜகஸ்தான், சவுதி அரேபியா, இந்தோனேஷியா மற்றும் சிரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்று உள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதும். அதில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் முறையே சிரியா மற்றும் இந்தோனேஷிய அணிகளை வீழ்த்தி இருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 3-வது போட்டியில் கஜகஸ்தான் அணியை எதிர் கொண்டது. அதில் இந்திய அணி 70-73 என்ற புள்ளி கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 5 புள்ளிகளுடன் உள்ள இந்திய அணி தனது அடுத்த இரு போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அணி தனது அடுத்த போட்டியில் நாளை சவுதி அரேபியா அணியுடன் விளையாட உள்ளது.


Next Story