தெலுங்கானாவில் பெண்கள், திருநங்கைகளுக்கு இன்று முதல் பேருந்தில் இலவச பயணம்

தெலுங்கானாவில் வசிக்கும் பெண்கள் மட்டுமே இந்த சேவையைப் பெற தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-08 22:20 GMT

கோப்புப்படம் 

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 65 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அந்த மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதை தொடர்ந்து, தெலுங்கானா மாநில முதல் மந்திரியாக ரேவந்த் ரெட்டி நேற்று முன்தினம் பதவி ஏற்றார்.

இந்நிலையில், தெலுங்கானாவில் அனைத்து வயது பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் இலவச பேருந்து பயணத்தை தெலுங்கானா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் கீழ் மாநில எல்லைகளுக்குள் இயக்கப்படும் பல்லே வெலுகு மற்றும் விரைவு பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து பெண்களும், மூன்றாம் பாலினத்தவரும் வயது வித்தியாசம் இன்றி, இந்த திட்டத்தில் பயன் பெறலாம். தெலுங்கானாவில் வசிக்கும் பெண்கள் மட்டுமே இந்த சேவையைப் பெற தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச பயணம் மேற்கொள்ள விரும்பும் பெண்கள், தங்களுடைய வசிப்பிட முகவரியை உறுதிப்படுத்தும் வகையிலான அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு 'ஜீரோ டிக்கெட்' வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்