ரஜினிக்கு விரைவில் பாராட்டு விழா - நடிகர் விஷால்

இன்று பிற்பகல் நல்ல செய்தியை அறிவிக்க உள்ளதாக நடிகர் விஷால் கூறியுள்ளார்.;

Update:2025-08-29 11:59 IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் தற்போது ரவி அரசு இயக்கத்தில் ‘மகுடம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 35-வது படம் ஆகும்.

நடிகர் விஷாலுக்கு எப்போது திருமணம்? என்று திரை உலகமே ஆவலுடன் காத்திருந்தது. ஆனாலும் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர் தான் தனது திருமணம் என்பதில் விஷால் உறுதியாக இருந்தார். இந்த நிலையில் சென்னையில் நடந்த ஒரு பட விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சாய் தன்ஷிகாவை காதலிப்பதாகவும், இருவரும் ஆகஸ்டு 29-ந்தேதி திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் விஷால் அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

நடிகர் விஷால் தனது 48-வது பிறந்தநாளை சென்னையில் இன்று ஆதரவற்றோர் மற்றும் முதியோருடன் கொண்டாடி இருக்கிறார்.அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் திருமணம் குறித்த கேள்வி எழுப்பப்ட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ எப்போது திருமணம் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு இன்று பிற்பகல் நல்ல செய்தியை அறிவிக்கிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் எனது திருமணம் நிச்சயம் நடக்கும்” என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிக்கு, நடிகர் சங்கம் சார்பாக பாராட்டு விழா நடத்தப்படுமா?' என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஒருவர் 50 வருடங்கள் திரையுலகில் நீடித்து, அதுவும் சூப்பர் ஸ்டாராகவே தொடர்வது என்பதை உலக சாதனையாகவே நான் பார்க்கிறேன்.தற்போது நடிகர் சங்க கட்டட வேலைகள் நடந்து வருவதால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அதேநேரம் ரஜினி சாருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்ற உணர்வும் உள்ளது. விழா தொடர்பாக பரிசீலித்து வருகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்