நெல்லையில் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் 30 சவரன் நகை திருட்டு: காவலர் உட்பட 2 பேர் கைது
நெல்லை மாநகர ஆயுதப்படை காவல் குடியிருப்பிலுள்ள வீட்டின் முன்பக்க கதவினை திறந்து வீட்டில் இருந்த அலமாரியை உடைத்து 30 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.;
கடந்த 16ம் தேதி திருநெல்வேலி மாநகரம், பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை காவல் குடியிருப்பிலுள்ள வீட்டின் முன்பக்க கதவினை திறந்து வீட்டில் இருந்த அலமாரியை உடைத்து அதிலிருந்த சுமார் 30 சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது தொடர்பாக பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் மேற்சொன்ன வழக்கு சம்பந்தமான புலன் விசாரணையில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட திருநெல்வேலி மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த முகமதுஅசாருதீன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து திருடுபோன நகைகளை மீட்டு பெருமாள்புரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.