உள்ளூர் நிலைமையே ஊசலாடும் போது உலக அரசியல் தேவைதானா? - முதல்-அமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி
கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த நீங்கள் காசாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகசிறந்த நகைச்சுவை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வர வலியுறுத்தியும், அதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வலியுறுத்தியும் வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும்" என்று கூறினார்.
மேலும் இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "காசாவில் உலகமே பார்க்க இஸ்ரேல் நடத்தி வரும் அப்பட்டமான மனித உரிமை மீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது; உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டியது! எங்கோ நடக்கிறது என்று உலகின் மிகப் பெரும் ஜனநாயகமான இந்தியா இந்த விவகாரத்தில் கண்மூடி இருக்கக் கூடாது.
பாலஸ்தீனத்தைத் தொடக்கத்திலேயே அங்கீகரித்த கொள்கையுடைய இந்தியா மீண்டுமொருமுறை வரலாற்றில் சரியான முடிவை எடுக்க வேண்டிய நேரம் இது. இதற்காக மத்திய அரசை வலியுறுத்தி, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் கொண்டுவரப்படும்! மனிதம் காப்போம்!" என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் முதல்-அமைச்சரின் பதிவை குறிப்பிட்டு, உள்ளூர் நிலைமையே ஊசலாடும் போது உலக அரசியல் உங்களுக்கு தேவைதானா? என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
"கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காசாவை பற்றிய கவலை எதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே? உள்ளூர் நிலைமையே ஊசலாடும் போது உலக அரசியல் உங்களுக்கு தேவைதானா?
பாலஸ்தீனத்திற்கு விடிவு காலம் பிறக்க வேண்டும் என பேசும் உங்களால் வேங்கைவயல் போன்ற கொடுமைகளில் இருந்து மக்களை விடுவிக்க முடியவில்லையே ஏன்? கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த நீங்கள் காசாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகசிறந்த நகைச்சுவை! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.