தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: ராகுல் காந்தியை சந்திக்கிறார் கனிமொழி
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்டுப்பெறுவோம் என்று கூறிவருகின்றன.;
சென்னை,
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் (25 தொகுதிகளில் போட்டியிட்டது), விடுதலை சிறுத்தைகள் கட்சி (6), ம.தி.மு.க. (6), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (6), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (6), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (3), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (3), மனிதநேய மக்கள் கட்சி (2), தமிழக வாழ்வுரிமைக்கட்சி (1) உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.
கூட்டணிக்கு தலைமை வகித்த தி.மு.க. 177 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில், ம.தி.மு.க., கொ.ம.க., ம.ம.க., தமிழக வாழ்வுரிமை கட்சி போன்றவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதும் அடங்கும். இறுதி வடிவம் பெற்ற கூட்டணி கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் இந்த முறையும் இடம் பெற்றுள்ளது. கூடுதலாக, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யமும் கைகோர்த்துள்ளது.
இந்த சூழலில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எல்லாம், இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்டுப்பெறுவோம் என்று கூறிவருகின்றன. ஆனால், வெளிப்படையாக இன்னும் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) டெல்லி செல்லும் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.