பாகிஸ்தானுடன் போர் தேவையில்லாதது: திருமாவளவன்
அமித்ஷாவை பதவி விலக வேண்டும் என கூறுவது ஆதங்கத்தின் வெளிப்பாடு மட்டுமே என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.;
திருச்சி,
திருச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஜாதி, மதம், இனம், மொழி என்கிற வேறுபாடு இல்லாமல் இந்தியர் என்ற உணர்வோடு பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும். ஆனால், இந்தியாவில் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் பகை வளர்த்து, ஒற்றுமை இல்லாத சூழலை சங்பரிவார்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. காஷ்மீர் தாக்குதல் விவகாரத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா பதவி விலக வேண்டும் என கூறுவதில் எங்களுக்கு எந்த அரசியல் ஆதாயமும் இல்லை. ஆதங்கத்தின் வெளிப்பாடு மட்டுமே.
காஷ்மீரில் நடந்த தாக்குதல் இருநாட்டிற்கும் இடையேயான போராக மாறிவிடக்கூடாது. பயங்கரவாத தாக்குதலுக்கு ஒருநாடு பொறுப்பு என பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுக்கக்கூடாது. நம்முடைய வலிமையை வேறு நாட்டின் மீது நிரூபித்து காட்டக்கூடாது. அது உலக நாடுகளின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணை போகுமேயானால், அதை உலக அளவில் அம்பலப்படுத்த வேண்டும். அவர்களை அந்நிய படுத்த வேண்டுமே தவிர போர் தேவையில்லாதது.
இந்தியர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால், இந்தியாவில் சமூக நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும். காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு பயன்படவில்லை, மாறாக அதை தீவிரப்படுத்துவதற்கு தான் பயன்பட்டுள்ளது என்பது காஷ்மீரில் தற்போது நடந்துள்ள தாக்குதல் மூலம் தெளிவாகி உள்ளது.
பயங்கரவாதிகள் ஜாதி, மதம் என எதையும் பார்க்க மாட்டார்கள். காஷ்மீரில் நடந்த தாக்குதல் மதத்தை பார்த்து நடந்த தாக்குதல் போல் தெரியவில்லை. இந்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது. காஷ்மீருக்கு வரும் பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் எச்சரிக்கை விடும் விதமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை உள்ளது உள்ளபடியே புரிந்து கொள்ள வேண்டும். இதில் எந்தவித கற்பிதமும் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.