அதிமுக கூட்டணிக்கு விஜய் வருவாரா? அண்ணாமலை பதில்

கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை வைத்தது சரிதான் என அண்ணாமலை கூறியுள்ளார்.;

Update:2025-10-09 17:53 IST

சென்னை,

சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணி உருவப்படத்திற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

கரூர் என் ஊர். யார் வேண்டுமானாலும் வரலாம். அனுமதி தேவையில்லை. விஜய் கரூர் செல்ல உரிமை உள்ளது. நாட்டில் யார் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். டிஜிபியிடம் மனு அளித்து செல்ல வேண்டியதில்லை. கரூர் மக்கள் பூதாகரமானவர்கள் அல்ல, விஜய் கரூருக்கு செல்ல போலீசாரின் அனுமதி எதற்கு? இறப்பு வீட்டுக்கு வருவோரிடம் எப்படி நடக்க வேண்டும் என்று கரூர் மக்களுக்கு தெரியும்.

அதிமுக கூட்டத்தில் தவெகவினர் வருகை குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, தேர்தலுக்கும் கூட்டணிக்கும் அவகாசம் உள்ளது. அதிமுக கூட்டணிக்கு விஜய் வருவாரா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்றார்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை,

திருமாவளவன் உடன் வந்தவர்கள் வழக்கறிஞரை தாக்கியது தவறு. வழக்கறிஞர் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு திருமாவளவன் தான் பொறுப்பு. இன்னும் நட்பில் உள்ள ஆதவ் அர்ஜுனாவை தவெகவுக்கு அனுப்பிவிட்டு பாஜகவை திருமாவளவன் திட்டுகிறார். விடுதலை சிறுத்தைகளின் வாக்குகள் வேறு எங்கோ செல்வதால் திருமாவளவன் பதற்றப்படுகிறார்.

கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை வைத்தது சரிதான்.அரசு பரிந்துரைத்த பட்டியலில் கருணாநிதி பெயர் இருக்கும்போது எம்.ஜி.ஆர் பெயர் ஏன் இல்லை? தலைவர்கள் பெயர் விடுபட்டதால் சாதி பெயர்களை நீக்கும் அரசாணையை திரும்ப பெற வேண்டும். பள்ளிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்துவது கண்டனத்திற்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்