கிளாம்பாக்கம் பஸ் நிலையம் குறித்த கேள்வி:... ... கிளாம்பாக்கம் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் ; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
x
Daily Thanthi 2024-02-13 07:17:56.0

கிளாம்பாக்கம் பஸ் நிலையம் குறித்த கேள்வி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை,

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், கவர்னர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த சூழலில் தமிழ்நாடு சட்டசபையின் 2-வது நாள் அமர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதில் முதலாவதாக முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மறைவு குறித்த இரங்கல் குறிப்புகளும், தே.மு.தி.க. தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் வெங்கிடரமணன், கண் டாக்டர் பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி, தமிழக முன்னாள் தலைமைச் செயலாளரும் ஒடிசாவின் முன்னாள் கவர்னருமான ராஜேந்திரன் ஆகியோரின் மறைவு குறித்த இரங்கல் தீர்மானமும் வாசிக்கப்பட்டது.

இதனையடுத்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு எம்.எல்.ஏ.க்கள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பதில் அவசரம் காட்டியதால் பயணிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் சிறு சிறு பிரச்சினைகளை சரி செய்த பிறகே கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், பதில் சொல்லும்போது என் பெயரை அமைச்சர் கூறியதால் விளக்கம் அளிக்கிறேன் என்றும், கொரோனா காலத்தில் கட்டுமான பணி நடைபெறாததால் அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

கிளாம்பாக்கம் பஸ் நிலையம் குறித்து எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "சிறிய பிரச்சினைகள் மட்டுமல்ல.. பெரிய பிரச்சினைகளையும் தீர்த்து வைத்துதான் பஸ் நிலையம் திறந்தோம். கிளாம்பாக்கத்தில் பிரச்சினைகள் இருந்தால் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். நேரில் அழைத்துச் செல்கிறோம்... பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம். இந்த பிரச்சனையை இத்துடன் முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறினார். 


Next Story