பைரசியால் திரைத்துறையை விட பொதுமக்களுக்குதான் பெரிய இழப்பு - இயக்குநர் ராஜமவுலி

பைரசி தளங்களில் மக்கள் படங்களை டவுன்லோடு செய்யும்போது அவர்கள் உங்களது தனிப்பட்ட தகவல்களை திருடி அதன்மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று ராஜமவுலி கூறியுள்ளார்.
ஐபொம்மா மற்றும் பப்பம் ஆகிய இணையதளங்களின் வழியாக பல்வேறு மொழி திரைப்படங்களை சட்டவிரோதமாக வெளியிட்டு வந்த கும்பலின் தலைவனை ஐதராபாத் சைபர் கிரைம் பிரிவு கைது செய்துள்ளது. இந்த கும்பலின் தலைவன் ரவி இமாண்டி உட்பட மேலும் ஐந்து நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்
சட்டவிரோதமாக திரைப்படங்கள் வெளியாவதை தடுக்க தெலுங்கு திரைப்பட வணிக சங்கம் வழக்குபதிவு செய்ததுடன் விசாரணையைத் தொடங்கியது. தொடர்ந்து செப்டம்பர் மாதம் திரைப்படங்களை சட்டவிரோதமாக டெலிகிராம் உட்பட பல்வேறு செயலிகள் மூலம் விநியோகம் செய்த குற்றத்திற்காக ஐந்து நபர்களை ஐதராபாத் போலீஸ் கைது செய்தது.
ரவி இமாண்டியை விசாரணை செய்தபோது பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் தெரியவந்துள்ளன. கிட்டத்தட்ட 65 இணையதளங்களின் வழியாக சட்டவிரோதமாக திரைப்படங்களை இந்த கும்பல் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் ரவி சுமார் ரூ 20 கோடி வரை சம்பாதித்துள்ளார். சட்டவிரோதமாக திரைப்படங்களை தரவிறக்க வரும் இணைய பயன்பாட்டாளர்களை பிற பெட்டிங் ஆப்களை பயன்படுத்த ஊக்குவித்து அதன் மூலம் பல லட்சம் வருமானம் ஈட்டியுள்ளனர். இந்த ஆப்களை தரவிறக்கும் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் , வங்கி கணக்கு விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து அவற்றை பெரும் தொகைக்கு சைபர் குற்றவாளிகளுக்கு விற்பனை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் பைரசி தளங்கள் குறித்து பொதுமக்களுக்கு இயக்குநர் ராஜமவுலி எச்சரிக்கை விடுத்துள்ளார். “புதுப்படங்களை இலவசமாக பார்க்கலாம் என பைரசி தளங்களில் மக்கள் டவுன்லோடு செய்கிறார்கள். இங்கு எதுவும் பிரீ கிடையாது. உங்களது தனிப்பட்ட தரவுகளை திருடி அதன்மூலம் அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். ஐபொம்மா தளம் வைத்திருந்தவரை கைது செய்திருக்கலாம். ஆனால் இதே போல இன்னும் பல தளங்கள் உள்ளன. பைரசியால் திரைத்துறையை விட பொதுமக்களுக்குதான் பெரிய இழப்பு” என்று அவர் கூறியுள்ளார்.






