விழுப்புரம் அங்காளம்மன் கோவிலில் ஆனி மாத ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்

அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன.
Viluppuramவிழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆனி மாத ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.
பின்னர் மகா தீபாராதனையுடன் இரவு 12 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி அங்காளம்மனை வழிபாடு செய்தனர். இந்த விழாவை முன்னிட்டு ஏ.டி.எஸ்.பி. தினகரன் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






