திருப்பதி பிரம்மோற்சவ விழா: அனுமந்த வாகனத்தில் வலம் வந்த கோவிந்தராஜ சுவாமி
வாகன சேவையை முன்னிட்டு பல்வேறு கலைஞர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முதல் நாளில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜ சுவாமிக்கு பால், தயிர், தேன், சந்தனம், பல்வேறு பழச்சாறுகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் ஊஞ்சல் சேவையும், இரவில் பெரிய சேஷ வாகன வீதிஉலாவும் நடந்தது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜை, வாகன சேவை நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் விழாவின் 5-ம் நாளான நேற்று இரவு கருட வாகன சேவை நடைபெற்றது. 6-ம் நாளான இன்று காலையில் அனுமந்த வாகன சேவை நடைபெற்றது. அனுமந்த வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி உற்சவர் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். வாகன சேவையை முன்னிட்டு பல்வேறு கலைஞர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் திருமலையின் இரு ஜீயர்கள், தேவஸ்தான துணை செயல் அதிகாரி சாந்தி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை மறுநாள் (9-ந்தேதி) தேரோட்டம், 10-ந்தேதி சக்கர ஸ்நானம் நடக்கிறது.








