பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா- சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கற்பக விநாயகர்

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.
திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் இங்கு பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான சதுர்த்தி விழா கடந்த 18-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினந்தோறும் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு வாகனங்களில் விநாயகர் வீதி உலா வந்தார்.
விழாவின் 8-வது நாளான நேற்று, பிட்டுக்கு மண் சுமந்த அலங்காரத்தில் கற்பகவிநாயகர் எழுந்தருளினார். 9-வது நாள் திருவிழாவான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக, அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் கற்பகவிநாயகரும், மற்றொரு தேரில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளினர்.
மாலை 4.30 மணிக்கு மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் கற்பகவிநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் சந்தனகாப்பு அலங்காரத்தில் மூலவர் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் கற்பகவிநாயகருக்கு தீபாராதனை நடைபெற்ற பின்னர் தேரோட்டம் நிகழ்ச்சி தொடங்குகிறது.
இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுப்பார்கள். சண்டிகேசுவரர் தேரை முழுக்க, முழுக்க பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். தொடர்ந்து இரவு சுவாமி யானை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
10-ம் திருநாளான நாளை விநாயகர் சதுர்த்தி அன்று தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பகவிநாயகர் எழுந்தருளி கோவில் திருக்குளத்தில் காட்சியளிக்கிறார். அதன் பின்னர் கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து உச்சிகால சிறப்பு பூஜைகள் நடைபெறும்போது மதியம் மூலவர் கற்பகவிநாயகருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகளின் புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி பழனியப்பச் செட்டியார் மற்றும் நச்சாந்துபட்டி குமரப்பச் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.






