திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கோலாகலம்; தங்க தேரில் சுவாமி வீதிஉலா

தங்க தேரில் பவனி வந்த சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை
கந்தசஷ்டி திருவிழாவில் தற்காலிக கொட்டைகளில் ஏராளமான பக்தர்கள் தங்கி விரதம் இருந்து வருகின்றனர்.
முருப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழா தொடங்கிய முதல் நாளில் இருந்து உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் வந்துள்ள பக்தர்கள் கோவிலில் தங்கியிருந்து விரதம் கடைபிடித்து வருகின்றனர்.
இதற்காக திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மொத்தம் 18 தற்காலிக தங்கும் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தங்கியிருந்து விரதம் இருந்து வருகின்றனர்.
6 நாட்களும் தினமும் காலையில் எழுந்து கடலில் நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் தினமும் ஒருவேளை மட்டும் பாலும், பழமும் சாப்பிடுகின்றனர். மற்ற உணவுகளை தவிர்க்கின்றனர்.
அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 4-ம் திருவிழாவான நேற்று காலையில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு நடைபெற்றது.
மூலவருக்கு உச்சிகால தீபாராதனை முடிந்தபின், யாகசாலையில் தீபாராதனையும், மாலையில் சாயரட்சை தீபாராதனையும் நடைபெற்றது.
மாலையில், திருவாவடுதுறை ஆதினம் கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
இரவில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
6-ம் திருவிழாவான நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை ஆகியவை நடக்கிறது.
மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவுப்படி திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் மாவட்ட நிர்வாகமும், கோவில் பணியாளர்களும் செய்து வருகிறார்கள்.






