திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவில் கொடி மரங்களுக்காக ‘திவ்ய விருட்சங்கள்’ திட்டம் தொடக்கம்

ஆகம மரபுகளின்படி கொடிமரம் தயாரிக்க பொதுவாக தேக்கு, ஏகிஷா, இந்தியன் கினோ, டெர்மினேலியா, ஷோரியா வகை மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவில்களில் உள்ள கொடி மரங்களுக்காக ‘திவ்ய விருட்சங்கள்’ என்ற புதிய திட்டத்தை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கி உள்ளது. அதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆன்மிகத்துடன் சேர்த்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு வழிகாட்டும் வகையில் நாட்டிலேயே முதல் முறையாக இத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆகம சாஸ்திரங்களின் விதிமுறைகளுக்கு ஏற்ப பழமையான இந்து கோவில்களில் மிகுந்த முக்கியத்துவம் கொண்ட கொடிமரங்கள் அமைப்பதற்குத் தேவையான திவ்ய விருட்சங்களை தேவஸ்தானம் வளர்த்து, பாதுகாத்து, பயன்படுத்துவதாகும்.
கோவில் கொடிமரங்கள் ஒரு கட்டிட அமைப்பின் பகுதி மட்டுமல்ல, அது உலகத்துக்கும், தெய்வீக உலகத்துக்கும் இடையிலான நிரந்தர பிணைப்பின் சின்னமாகும். கோவில் வளாகத்தில் நேராக நிமிர்ந்து நிற்கும் கொடிமரம் பக்தி, தூய்மை மற்றும் தெய்வீக பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.
ஆகம சாஸ்திரங்களின்படி கொடிமரம் நேராக வளர்ந்த ஒரே மரத்தின் புனிதத்தண்டில் இருந்து தயாரிக்க வேண்டும். அந்த மரம் ஆன்மிக, ஜோதிட மற்றும் சாஸ்திர விதிமுறைகளுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட்டு, பல ஆண்டுகள் பாதுகாத்து வளர்க்கப்பட்ட பின்னர் சாஸ்திரப் பூர்வமாக பூஜைகள் செய்த பின் பயன்படுத்தப்படுகிறது.
ஆகம மரபுகளின்படி கொடிமரம் தயாரிக்க பொதுவாக தேக்கு, ஏகிஷா, இந்தியன் கினோ, டெர்மினேலியா, ஷோரியா வகை மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை வலிமையானவை, நீண்டகாலம் நீடிக்கும் தன்மை கொண்டவை. நேராக வளரக்கூடிய இயல்புடையவை என்பதால் கொடிமரங்களுக்கு மிகவும் ஏற்றதாகும்.
மரம் முழுமையாக வளர்ந்த பின், சாஸ்திரப்பூர்வமாக பூஜைகள் செய்து கொடிமரமாக வடிவமைக்கப்படுகிறது.
பின்னர் அது பாதுகாப்புக் கவசத்தால் மூடப்பட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருப்பதுபோல் புனிதமான கோவில்களில் தங்கக் கவசத்தால் அலங்கரிக்கப்படுகிறது.
ராஜகோபுரமும் கருவறை விமானமும் இடையிலான புனித இடத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் கொடிமரத்தின் மீது கருட கொடி ஏற்றப்படுகிறது.
ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோற்சவ விழாவின் தொடக்கத்தை அறிவிக்கும் கொடியேற்றம் சகல லோகங்களில் இருந்தும் தேவர்களை அழைக்கும் மங்களகரமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்த திட்டம் திவ்ய விருட்சங்கள் வளர்ப்பில் தேவஸ்தானத்தின் தொலைநோக்கு திட்டமாகும்.
நாடு முழுவதும் 60-க்கும் மேற்பட்ட கோவில்களை நிர்வகித்து வரும் திருப்பதி தேவஸ்தானம் எதிர்காலத்தில் பல மாநிலங்கள் மற்றும் மத்திய ஆட்சிப் பகுதிகளில் ஆகம விதிகளுக்கு ஏற்ப வெங்கடேஸ்வரசாமி கோவில்களை அமைக்கும் பொறுப்பை கருத்தில் கொண்டு, இந்தத் திவ்ய விருட்சங்கள் திட்டத்தை மிகுந்த தொலைநோக்குடன் தொடங்கி உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், காலப்போக்கில் மாற்றம் தேவைப்படும் கொடிமரங்களுக்கு பதிலாக, சாஸ்திர விதிகளுக்கு ஏற்ப புதிய கொடிமரங்கள் நிறுவப்படுகின்றன. எதிர்காலத்தில் திருப்பதி தேவஸ்தானம் கட்டவிருக்கும் கோவில்களுக்கு தேவையான கொடிமரங்களுக்கான புனித மரக்கட்டைகளை முன்கூட்டியே தயார் செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த மதிப்புமிக்க திட்டத்தின் ஒரு பகுதியாக, திவ்ய விருட்சங்கள் திட்டத்துக்காக சுமார் 100 ஏக்கர் நிலத்தை ஒதுக்க திருப்பதி தேவஸ்தான நிர்வாகக் குழு முன்மொழிந்துள்ளது. இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுவதன் மூலம், கொடிமரங்களுக்கு தேவையான திவ்ய மரங்களை தானாகவே வளர்க்கும் முதல் கோவில் நிறுவனமாக திருப்பதி தேவஸ்தானம் வரலாறு படைக்க உள்ளது. இதன் மூலம் ஆகம சுத்தம், ஆன்மிகப் புனிதம், சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் நிறுவனத் தன்னிறைவு ஆகியவை தலைமுறை தலைமுறையாக நிலைநிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






