திருவள்ளூர்: ஆஞ்சநேயருக்கு 73,000 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு பூஜை

கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர்: ஆஞ்சநேயருக்கு 73,000 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு பூஜை
Published on

திருவள்ளூர், பெரியகுப்பம், தேவி மீனாட்சி நகர் பகுதியில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு 32 அடி உயரம் உள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா இன்று காலையில் மங்கல இசையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி மூல மந்திர யாகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து தங்க கவசம் அணிவித்து பல்வேறு வகையான மலர்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

சிறப்பு பூஜைகளின்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் திருவள்ளூர் அடுத்த திருப்பந்தியூர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியான இன்று ஆஞ்சநேயருக்கு 73 ஆயிரம் வடைகளால் செய்யப்பட்ட மாலைகள் சார்த்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

காக்களூர் வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இக்கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com