பட்ஜெட் எதிரொலி: மேலும் உயர்ந்த தங்கம் விலை - தற்போதைய நிலவரம் என்ன..?

மத்திய பட்ஜெட் எதிரொலியாக தங்கத்தின் விலை தற்போது மேலும் அதிகரித்துள்ளது.
சென்னை,
தங்கம் விலை கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதத்தில் ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.56 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகும் தொடர்ந்து ஏற்றத்திலேயே தங்கம் விலை இருந்து வந்ததை பார்க்க முடிந்தது. கடந்த ஆண்டு இறுதி வரை ரூ.59 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையிலான இடைப்பட்ட விலையிலேயே தங்கம் விலை காணப்பட்டது.
எப்போது வேண்டுமானாலும் ரூ.60 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி அந்த நிலையையும் எட்டியது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ரூ.61,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது.
இந்த நிலையில் மாதத்தின் தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை உயர்ந்திருந்தது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.61,960 என்ற புதிய உச்சத்தில் விற்பனையாகி வந்தது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,745-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் மத்திய பட்ஜெட் எதிரொலியாக தங்கத்தின் விலை தற்போது மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.62,320 என்ற புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.7,790-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று காலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து விற்பனையானநிலையில் தற்போது சவரனுக்கு மேலும் ரூ.360 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.