மாலையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்தை தொட்டது

கோப்புப்படம்
தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை கடந்த மாதம் (செப்டம்பர்) முழுவதும் பெரும்பாலான நாட்களில் ஏற்றத்துடனேயே காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இம்மாத தொடக்கத்தில் இருந்தும் விலை ஏற்ற-இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக ஒரே நாளில் இருமுறை தங்கம் விலை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400-ம், கிராமுக்கு ரூ.50-ம் உயர்ந்து, முறையே ரூ.87,600-க்கும், ரூ.10,950-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,480-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.11,060-க்கு விற்பனையானது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாலையில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.89 ஆயிரம் என்று புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.11,125-க்கு விற்பனையாகி வருகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,400 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையும் மாலையில் உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.167-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.






