காலையில் குறைந்து, மாலையில் அதிகரித்த தங்கம் விலை... நிலவரம் என்ன..?

கோப்புப்படம்
காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்த நிலையில் மாலையில் அதிகரித்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து எகிறி வருகிறது. நாளுக்கு நாள் புதிய உச்சம் என்ற பாணியிலேயே தங்கம் விலை இருக்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ.60 ஆயிரம் என இருந்த தங்கம் விலை தற்போது ரூ.97 ஆயிரத்தையும் கடந்து பயணிக்கிறது.
அதிலும் இம்மாதத்தில் மட்டும் விலை கிடுகிடுவென உயர்ந்து விண்ணை முட்டும் அளவுக்கு தங்கம் சென்று இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. கிராமுக்கு ரூ.300-ம், சவரனுக்கு ரூ.2,400-ம் அதிரடியாக ஒரே நாளில் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,200-க்கும், ஒரு சவரன் ரூ.97,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.250-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரமும் அதிரடியாக குறைந்து ஒரு கிராம் ரூ.11,950-க்கும், ஒரு சவரன் ரூ.95,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
காலையில் தங்கம் விலை குறைந்த நிலையில், தற்போது மாலையில் அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலையில் சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.96 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.12 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.






