புதிதாக கட்டப்பட்ட போலீஸ் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த 8 வயது சிறுமி

புதிதாக கட்டப்பட்ட போலீஸ் நிலையத்தை 8 வயது சிறுமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் கோட் கார்வி பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதி உள்ளது. இந்த மசூதியில் தொல்லியல் ஆய்வு நடந்த கடந்த ஆண்டு கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி போலீசார் உதவியுடன் அதிகாரிகள் மசூதியில் ஆய்வு நடந்த சென்றனர்.
இந்த ஆய்வுக்கு அந்த பகுதியை சேர்ந்த இஸ்லாமிய மதத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, வன்முறை வெடித்தது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து மசூதி அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க புதிதாக போலீஸ் நிலையம் கட்ட அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, மசூதிக்கு எதிரே போலீஸ் நிலையம் கட்டப்பட்டது.
இந்நிலையில், புதிதாக கட்டப்பட்ட போலீஸ் நிலையம் இன்று திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது, அப்பகுதியை சேர்ந்த கன்கன் கஷ்யப் என்ற 8 வயது சிறுமி ரிப்பன் வெட்டி போலீஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.






