உ.பி.யில் அவலம்; மேடையில் மாலை மாற்றி விட்டு, காதலனுடன் மணமகள் ஓட்டம்

இளைஞரை, மணமகளின் தந்தை மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது மணமகளே பேசியுள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் அஜய்ப்பூர் கிராமத்தில் பூர்வா பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகளில் இரு வீட்டார் ஈடுபட்டு இருந்தனர். மணமகனும், மணமகளும் மாலை மாற்றி கொள்ளும் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை இரவு நடந்தது. மணமகன் ஊர்வலம் அழைத்து வரப்பட்டு மேடைக்கு கொண்டு வரப்பட்டார்.
அப்போது, மணமக்கள் இருவரும் மகிழ்ச்சியாக காணப்பட்டனர். சடங்குகளும் நடந்து முடிந்தன. மேடையில் மணமக்கள் மாலை மாற்றியதும் அவரவர் அறைகளுக்கு சென்றனர். இதனால், மணமகனின் வீட்டார் மற்ற ஏற்பாடுகளுக்கு தயாராகி கொண்டிருந்தனர். அடுத்து, நடைபெற இருந்த நிகழ்ச்சிக்காக மணமகளை அழைக்க சென்ற பெற்றோர், மணமகளை காணாமல் திடுக்கிட்டனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள இளைஞர் ஒருவருடன் மணமகள் தப்பி சென்றது தெரிய வந்தது.
உடனே, மணமகளின் தந்தை மொபைல் போனில் அந்த இளைஞரை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், தந்தையுடன் நேரடியாக போனில் பேசிய மணமகள், காதலனையே திருமணம் செய்ய விரும்பினேன். அவருடனேயே வாழவும் விரும்பினேன் என கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். இதனால், இரு வீட்டாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி பூர்வா காவல் நிலையத்தில் இளைஞருக்கு எதிராக மணமகளின் தந்தை புகார் அளித்து உள்ளார். சட்டப்படி விசாரணை நடத்தப்படும் என மூத்த காவல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.






