டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: மக்கள் அவதி

டெல்லியில் நேற்று அதிகபட்சமாக ஆனந்த் விகார் பகுதியில் காற்றின் தர குறியீடு 408 ஆக இருந்தது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டும் காற்று மாசு தீபாவளிக்கு பிறகு மிக அதிகமாகவே இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த செயற்கை மழையை வர வைக்கலாம் என்ற யோசனையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் தோல்வியில் முடிந்தது. அது பற்றிய மறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று பனிப்பொழிவு சற்று கூடுதலாகவே, அதோடு காற்று மாசு கலந்து கடும் புகைமூட்டமாக தென்பட்டது. இதனால் பார்வைத்திறனின் தூரம் குறைவு மற்றும் கண் எரிச்சல் போன்றவற்றால் பலர் பாதிக்கப்பட்டனர். காற்றுத்தர அளவுக் குறியீட்டில் டெல்லியின் பல இடங்கள் மோசமான நிலையை காட்டின. பொதுவாக 100-க்கு மேல் சென்றாலே அது மிதமான நிலையை தாண்டி மோசமான நிலைக்கு கொண்டு செல்கிறது என்று அர்த்தம். ஆனால் நேற்று டெல்லியில் அதிகபட்சமாக ஆனந்த் விகார் பகுதியில் காற்றின் தர குறியீடு 408 ஆக இருந்தது. பிற இடங்களில் 350-க்கு கீழே குறையவில்லை.
இந்த அதிக அளவிலான காற்று மாசுபாட்டால் சுவாச பிரச்சினைகள் உள்ளவர்களும், நீரிழிவு மற்றும் இருதய பிரச்சினை உள்ளவர்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு காற்று மாசு அதிகமானால் பக்கவாத பாதிப்புகள் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.






