பெங்களூரு: இரவு போதை விருந்தில் பங்கேற்ற இளம்பெண்கள் உள்பட 115 பேர் கைது

பெங்களூரு கக்கலிபுரா பகுதியிலுள்ள ஒரு ரெசார்ட் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா, சில ஊசிகள் சிக்கியுள்ளன என்று போலீஸ் சூப்பிரண்டு சீனிவாஸ் கவுடா தெரிவித்தார்.
பெங்களூரு: இரவு போதை விருந்தில் பங்கேற்ற இளம்பெண்கள் உள்பட 115 பேர் கைது
Published on

பெங்களூரு,

பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் கக்கலிபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சுகாஷ் கவுடா என்பவருக்கு சொந்தமான ரெசார்ட் உள்ளது. அங்கு இரவு போதை விருந்து (ரேவ் பார்ட்டி) நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று அதிகாலை அந்த ரெசார்ட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது ரெசார்ட்டில் இரவு போதை விருந்து நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் இளம்பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் இந்த போதை விருந்தில் பங்கேற்று இருந்தார்கள். அவர்கள் மது குடித்துவிட்டு போதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் சிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, ரெசார்ட்டில் இருந்த 115 பேரை போலீசார் கைது செய்தார்கள்.

அவர்களில் 35 பேர் இளம்பெண்கள் என்பதும், 3 பேர் சிறுவரகள் என்பதும் தெரியவந்தது. இந்த 115 பேரும் பெங்களூருவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். பெங்களூருவில் இருந்து கக்கலிபுராவில் உள்ள ரெசார்ட்டுக்கு வந்து நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று அதிகாலை வரை போதை விருந்து நடத்தியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கைதான 115 பேருக்கும் ராமநகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாஸ் கவுடா நிருபர்களிடம் கூறுகையில், கக்கலிபுராவில் உள்ள ரெசார்ட்டில் இரவு போதை விருந்தில் இளம்பெண்கள் உள்பட 115 பேர் சிக்கினார்கள். அவர்கள் மது குடித்திருப்பது தெரியவந்துள்ளது. போதைப்பொருட்கள் பயன்படுத்தினார்களா? என்பது மருத்துவ பரிசோதனையின்போது தான் தெரியவரும். ரெசார்ட் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையின்போது கஞ்சா, சில ஊசிகள் சிக்கியுள்ளன. என்றாலும், விருந்தில் பங்கேற்றவர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்தினார்களா? என்பது பற்றியும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com