வேட்பாளர்களுக்கு பாஜக அழுத்தம் - பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியைச் சேர்ந்த 3 வேட்பாளர்கள் கடைசி நாளில் வேட்பு மனுவை திரும்பப்பெற்றனர்.
பாட்னா,
பீகார் சட்டசபை தேர்தலில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு வருகிற 6-ம் தேதி 121 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த 121 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் வாபஸ் பெறுவது நேற்று முன் தினம் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று 121 தொகுதிகளில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த தொகுதிகளில் 1,690 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர். மனுக்கள் வாபஸ் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இறுதியாக தற்போது 1.314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முசாபர்பூர் தொகுதியில் அதிகபட்சமாக 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்தநிலையில், ஜன் சுராஜ் வேட்பாளர்கள் 3 பேர் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர். இதற்கு பாஜகவின் அச்சுறுத்தலே காரணம் என ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:
தேர்தலில் யார் வென்றாலும் கவலையில்லை. நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்ற பிம்பத்தை பாஜக கடந்த சில ஆண்டுகளாக உருவாக்கியுள்ளது. ஆனால், புதிய கட்சியான ஜன் சுராஜ் கட்சியை கண்டு தே.ஜ. கூட்டணி பயப்படுகிறது. ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற வற்புறுத்தப்பட்டுள்ளனர்.
இதுதான் பாஜகவின் தன்மை. பிரஹம்பூரில் எல்ஜேபி கட்சி ஹுலாஸ் பாண்டே என்ற வலுவான வேட்பாளரை களமிறங்கியுள்ளது. எங்களின் வேட்பாளார் சத்ய பிரகாஷ் திவாரி 3 நாட்கள் அங்கு பிரசாரம் செய்தார். ஆனால், நேற்று மனுவை வாபஸ் பெற்றுள்ளார். ஜன் சுராஜ் வேட்பாளர்கள் ஓடவில்லை அவர்கள் மிரட்டப்படுகிறார்கள். ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது.
எங்கள் கட்சியின் தனாபூர் வேட்பாளர் முதுர் ஷாவுக்கு அழுத்தம் கொடுத்து மனுவை வாபஸ் பெற வைத்துள்ளனர். இந்த அச்சுறுத்தல் காரணமாக பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது என தனாபூர் மக்கள் முடிவு செய்துள்ளனர். முதுர் ஷாவை ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியினர் கடத்தியதாக பாஜக தலைவர்கள் கூறினர். ஆனால், அவர் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, தர்மேந்திர பிரதான் ஆகியோருடன் உள்ள போட்டோ வெளிவந்துள்ளது.
பாஜக எப்படி வேண்டுமானாலும் மிரட்டட்டும். ஆனால், எங்களின் 240 வீரர்கள் களத்தில் உள்ளனர். அவர்கள் ஓட மாட்டார்கள். என்டிஏவை அப்புறப்படுத்தும் வரை ஓயவும் மாட்டார்கள். நவ.14-ல் எல்லாம் தெளிவாகப் புலப்படும்.
என்டிஏ-வுக்கு மகாகட்பந்தன் கூட்டணியைப் பார்த்து பயமில்லை. எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் பாகுபலிகள், மணல் கொள்ளைக்காரர்கள் என்று அவர்களுக்குத் தெரியும். என்டிஏவுக்கு ஜன் சுராஜில் இருக்கும் மருத்துவர்கள், வணிகர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் போன்ற நல்லவர்களைப் பார்த்துதான் பயம். எங்களது வேட்பாளர்கள் வேட்புமனுவை திரும்பப்பெற வேண்டுமென பாஜக அழுத்தம் கொடுத்துள்ளது; இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் முறையிடுவேன்
இவ்வாறு அவர் கூறினார்.






