பீகாருக்கு புதிய முதல்-மந்திரி வருவார்: பிரசாந்த் கிஷோர்

20 ஆண்டு கால ஆட்சியில் அவருடைய வாக்குறுதிகள் நீண்டகாலம் நம்பத்தக்க ஒன்றாக இருந்தது இல்லை என கிஷோர் கூறியுள்ளார்.
பாட்னா,
பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் அவருடைய சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், மக்கள் பயன்பெறும் வகையில் மி்ன் நுகர்வில் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளேன். வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் 125 யூனிட் வரை எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை.
வரும் ஆகஸ்டு 1 முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன்மூலம் 1. 67 கோடி பேர் பயன்பெறுவர். சூரியசக்தி மின்சார திட்டமும் மேலும் பரவலாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு மானியம் வழங்கப்படும். ஏழை குடும்பங்களுக்கு இலவச சூரிய மின் உற்பத்தி உபகரணங்களும் வழங்கப்படும்.
இது மின் நெருக்கடியை குறைக்க உதவும். அனைத்து மக்களும் எளிய மின்சாரம் பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என அவர் தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் மற்றும் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, 20 ஆண்டு கால ஆட்சியில் அவருடைய வாக்குறுதிகள் நீண்டகாலம் நம்பத்தக்க ஒன்றாக இருந்தது இல்லை.
பீகாரில் சட்டசபை தேர்தல் வரவுள்ள சூழலில், 125 யூனிட் இலவச மின்சாரம் என அவர் அறிவித்து இருக்கிறார். இதனை நம்ப ஒருவரும் தயாராக இல்லை என கூறியுள்ளார். பீகாருக்கு புதிய முதல்-மந்திரி வருவார். நிதிஷ்குமார் சென்று விடுவார் என்றும் கூறியுள்ளார்.






