கட்சி அலுவலகத்தில் பெண்ணுடன் அநாகரீகமாக நடந்துகொண்ட பா.ஜ.க. மாவட்ட தலைவர்

கட்சி அலுவலகத்தில் இருந்த ஊழியரை கிஷோர் வெளியே அனுப்பினார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்ட பா.ஜ.க. தலைவர் அமிர் கிஷோர் கஷ்யப். இவர் கடந்த மாதம் 12ம் தேதி இரவு 9.45 மணியளவில் கட்சி அலுவலகத்திற்கு காரில் வந்தார்.
கட்சி அலுவலகத்தில் இருந்த ஊழியரை கிஷோர் வெளியே அனுப்பினார். அப்போது, கிஷோரின் காரில் இருந்து ஒரு பெண் வேகமாக பா.ஜ.க. அலுவலகத்திற்குள் சென்றார்.
அந்த பெண்ணை பின் தொடர்ந்து கிஷோர் கட்சி அலுவலகத்திற்குள் சென்றார். அப்போது, அலுவலகத்திலுள்ள படிக்கட்டு அருகே வைத்து அந்த பெண்ணும், கிஷோரும் கட்டிப்பிடித்து அநாகரீகமாக நடந்து கொண்டனர். இந்த சம்பவம் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்கும்படி கிஷோரிடம் பா.ஜ.க. மாநில தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பெண்ணை கட்டிப்பிடித்து அநாகரீகமாக நடந்து கொண்டது தொடர்பாக கிஷோர் கூறுகையில், அந்த பெண் பா.ஜ.க. தொண்டர் ஆவார். தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஓய்வு எடுக்கவேண்டும் என்றும் அந்த பெண் கூறினார். இதனால், அவரை கட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்தேன். அலுவலகத்தில் உள்ள படிக்கட்டில் ஏறும்போது அந்த பெண்ணுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனால், அவருக்கு ஆதரவாக அவரின் கையை நான் பிடித்தேன். அவரும் என் கையை பிடித்துக்கொண்டார். என் மீது அவதூறு பரப்ப இந்த வீடியோ தவறாக பரப்பப்படுகிறது' என்றார்.






