புயல் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தல்


புயல் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தல்
x

பாதிப்புகளை மதிப்பீடு செய்ய உடனடியாக மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை தொடங்கிய மாநிலங்களவை பூஜ்ய நேரத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கூறியதாவது,

"பெஞ்சல் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியை தாக்கியதால், தமிழகத்தில் விமானம் மற்றும் ரெயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ததால், வெள்ளம் சூழ்ந்து, பயிர்கள் சேதமடைந்திருக்கின்றன.

குறிப்பாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் வெள்ளம் மற்றும் மின்சாரம் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். மற்ற மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை, ஆனால் அவர்களின் படகுகளும், மீன்பிடி வலைகளும் சூறாவளி காற்றால் சேதமடைந்தருக்கின்றன. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. விளைந்த பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. காய்கறி மற்றும் பழங்களை சந்தைப்படுத்த முடியாமல் விளைபொருட்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

குடியிருப்புகளில் மழை நீர் புகுந்ததால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மீட்பு நடவடிக்கைகளுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரின் உதவியை நாடியுள்ளோம். மத்திய மந்திரி அமித்ஷா, மீட்பு மற்றும் நிவாரணப் பொருட்களை விரைந்து வழங்க வேண்டும். சேதங்களை மதிப்பீடு செய்யவும் ஆய்வுக் குழுவை அனுப்பி, பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக தமிழக அரசுக்கு போதிய நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story