10 மாதத்தில் கசந்த காதல் திருமணம்... ஐ.ஏ.எஸ். அதிகாரி மகள் தூக்குப்போட்டு தற்கொலை


10 மாதத்தில் கசந்த காதல் திருமணம்... ஐ.ஏ.எஸ். அதிகாரி மகள் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 3 Dec 2025 2:45 AM IST (Updated: 3 Dec 2025 2:45 AM IST)
t-max-icont-min-icon

மனவேதனையில் மாதுரி சாஹிதி தவித்து வந்தார்.

அமராவதி,

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாடே பள்ளியில் வசிப்பவர் சின்ன ராமுடு. ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவரது மகள் மாதுரி சாஹிதிபாய் (வயது 27). இவர் கடந்த மார்ச் மாதம் நந்தியால மாவட்டம் பேதஞ்சர்லா மண்டலம் புக்கனபள்ளி தண்டாவை சேர்ந்த ராஜேஷ் நாயுடு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணமாகி ஒன்றாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் திருமணமான சில மாதங்களில் பிறந்த வீட்டில் வரதட்சணை கேட்டு வாங்கி வரும்படி மாதுரி சாஹிதிபாயை கணவர் ராஜேஷ் நாயுடு துன்புறுத்தியதாக தெரிகிறது.

மகளுக்கு நடக்கும் கொடுமையை அறிந்த தந்தை சின்ன ராமுடு மாதுரி சாஹிதிபாயை 2 மாதங்களுக்கு முன் தனது வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். இதனால் மனவேதனையில் மாதுரி சாஹிதி தவித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பெற்றோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, மாதுரி சாஹிதி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை வெகு நேரமாகியும் மகள் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் பணியாளர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, கழிவறையில் மாதுரி சாஹிதி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாதுரி சாஹிதிபாய் உடலை மீட்டு மங்கலகிரி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். வரதட்சணை கொடுமையால் தான் மகள் தற்கொலை செய்ததாக மருமகன் ராஜேஷ் நாயுடு மீது பெண்ணின் தந்தை சின்ன ராமுடு போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story