இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல்: இந்தியா அமைதி காப்பது ஏன்? சோனியா காந்தி கேள்வி

இந்தியாவுக்கும் ஈரானுக்கும் ஆழமான நாகரிகத் தொடர்பு உள்ளது என்று சோனியா காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆங்கில நாளிதழுக்கு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர், இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்து உள்ளார்.அதில் அவர், 'இஸ்ரேல்-ஈரான் விவகாரத்தில் இந்தியா அமைதி காப்பது ஏன்?. இது ராஜதந்திர தவறாகும். இந்தியாவின் தார்மீக பாரம்பரியத்தில் இருந்து விலகிச் செல்வதாகும். இஸ்ரேல் தாக்குதல் சட்டவிரோதமானது மற்றும் இறையாண்மை மீறிய செயலாக உள்ளது.
காசாவில் நிகழ்த்தப்படும் கொடூரமான தாக்குதல்களும் கண்டிக்கத்தக்கது.இந்தியாவுக்கும் ஈரானுக்கும் ஆழமான நாகரிகத் தொடர்பு உள்ளது. இஸ்ரேலுடன் இணைந்து இறையாண்மை கொண்ட பாலஸ்தீனம் அமைய வேண்டும் என்ற இந்தியாவின் நீண்டகால கொள்கையை மோடி அரசு கைவிட்டுவிட்டது. எனவே இனியும் தாமதிக்காமல், இந்தியா குரல் எழுப்ப வேண்டும்; விழிப்புடன் செயல்பட வேண்டும். போர் பதற்றத்தை தணிக்க அனைத்து ராஜதந்திர வழிகளையும் பயன்படுத்த வேண்டும்' என்று வலியுறுத்தி உள்ளார்.






