‘வந்தே மாதரத்தின் மகிமையை மீட்டெடுப்பது காலத்தின் கட்டாயம்’ - ராஜ்நாத் சிங்

வந்தே மாதரத்தை வரம்புகளுக்குள் அடைத்து வைக்க முயற்சிப்பது மிகப்பெரிய ஏமாற்று வேலை என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
‘வந்தே மாதரத்தின் மகிமையை மீட்டெடுப்பது காலத்தின் கட்டாயம்’ - ராஜ்நாத் சிங்
Published on

புதுடெல்லி,

நாட்டின் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு குறித்து இன்று நாடாளுமன்ற மக்களவையில் சிறப்பு விவாதம் தொடங்கியது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து இன்றைய விவாதத்தின்போது பா.ஜ.க. எம்.பி..யும், மத்திய மந்திரியுமான ராஜ்நாத் சிங் பேசியதாவது;-

வந்தே மாதரம் பாடலுக்கு நீதி செய்யப்படவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தேசிய கீதத்திற்கும், தேசிய பாடலுக்கும் சமமான இடம் வழங்கப்பட வேண்டும். தேசிய கீதம் நமது தேசிய உணர்வில் இடம்பிடித்துள்ளது. ஆனால் தேசிய பாடல் ஓரங்கட்டப்பட்டது. இது ஒரு பாடலுக்கு இழைக்கப்பட்ட அநீதி மட்டுமல்ல, சுதந்திர இந்தியாவின் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.

வந்தே மாதரத்தை வரம்புகளுக்குள் அடைத்து வைக்க முயற்சிப்பது மிகப்பெரிய ஏமாற்று வேலை. வந்தே மாதரத்தின் மகிமையை மீட்டெடுப்பது காலத்தின் கட்டாயம். வந்தே மாதரம் தன்னளவில் முழுமையானது. ஆனால் அதை சீர்குலைக்க முயற்சிகள் நடந்தன. வந்தே மாதரம் தேசிய உணர்வின் அழியாத பாடலாக இருந்து வருகிறது, அது எப்போதும் அப்படியே இருக்கும். உலகில் எந்த சக்தியாலும் அதைக் குறைக்க முடியாது. வந்தே மாதரத்திற்கு நடந்த அநீதி ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல, மாறாக காங்கிரஸ் கட்சியின் திருப்திப்படுத்தும் அரசியலின் தொடக்கமாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com