மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் கூட்டு பலாத்காரம்... சகோதரனுக்கு வீடியோ அனுப்பிய கொடூரம்

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹாசன் டவுன் பென்சன் மொகல்லா பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்தப்பகுதியை சேர்ந்த அப்துல் அப்தாப், ராஜிக் பாஷா, உம்ரான் ஆகிய 3 பேரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை கடத்தி மறைவான பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து 3 பேரும் சேர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
அத்துடன் பலாத்காரம் செய்ததை அவர்கள் வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் அந்த இளம்பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு 3 பேரும் தப்பி சென்றனர். பின்னர் பலாத்கார வீடியோவை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் சகோதரனுக்கு அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
ஆனால், அந்த வீடியோவை அவர்கள் உடனடியாக அழித்துவிட்டனர். இதையடுத்து இளம்பெண்ணின் சகோதரன், இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட இடத்துக்கு சென்று அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவம் குறித்து இளம்பெண்ணின் சகோதரன், பென்சன்மொகல்லா போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார், இளம்பெண் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அப்துல் அப்தாப், ராஜிக் பாஷா, உம்ரான் ஆகிய 3 பேரும் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் என்றும் பாராமல் அவரை கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்ததுடன், அதனை வீடியோ எடுத்து சகோதரனுக்கும் அனுப்பி வைத்தது தெரியவந்தது.
இதுகுறித்து பென்சன் மொகல்லா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொடூர சம்பவம் ஹாசனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






