கேரளாவில் 90 வயதிலும் தேர்தலில் போட்டியிடும் நாராயணன் நாயர்

கேரளாவில் 90 வயதிலும் தேர்தலில் போட்டியிடும் நாராயணன் நாயர்

சுயேச்சையாக போட்டியிடும் நாராயணன் நாயர் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் அடுத்த மாதம் 9, 11-ந் தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. அங்கு எர்ணாகுளம் மாவட்டம் அசமண்ணூர் ஊராட்சியில் 2-வது வார்டில் கவுன்சிலராக போட்டியிடுகிறார், 90 வயது நாராயணன் நாயர். சுயேச்சையாக போட்டியிடும் அவர் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் தனக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

அவரது மனைவி, ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இதே வார்டில் கவுன்சிலராக வெற்றி பெற்றிருந்ததோடு ஊராட்சி தலைவராகவும் பதவி வகித்தவர் ஆவார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்த நாராயணன் நாயர், அக்கட்சியில் இருந்து விலகி சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, வயது எனக்கு ஒரு பிரச்சினை இல்லை. 5 ஆண்டுகளில் மிகவும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு மக்கள் பணியாற்றுவேன். மக்கள் என் மீது பெரும் அன்பு கொண்டு உள்ளார்கள். இங்கு உள்ள அனைவரும் எனக்கு தெரிந்தவர்கள் தான். அவர்கள் என்னை நன்கு அறிவார்கள். ஒரு நாளைக்கு 5 வீடுகள் வீதம் நேரடியாக மக்களை சந்தித்து அவர்களிடம் வாக்கு சேகரித்து வருகிறேன். எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றார்.

ஒரு லுங்கியும், அரக்கை பனியனும் மட்டுமே அணிந்து வாக்காளர் வீடுகளுக்கு சென்று மலையாளத்தில் நாட்டுக்காரரே(தமிழில் என் மக்களே) என அன்புடன் அழைத்து ஓட்டு கேட்டு வருகிறார். வாக்காளர்களும் அவரை அன்புடன் வரவேற்று அமரச்செய்து அவருக்கு வாக்களிப்பதாக கூறி நம்பிக்கை அளித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com