பாஜக தேசிய செயல் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்பு

பீகார் மாநில மந்திரியாக இருந்த நிதின் நபீனுக்கு தேசிய செயல்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.
பாஜக தேசிய செயல் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்பு
Published on

புதுடெல்லி, 

உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாகவும், இந்தியாவின் ஆளும் கட்சியாகவும் கோடிக்கணக்கான தொண்டர்களுடன் பலமுடன் விளங்கி வருகிறது, பா.ஜனதாஇந்த கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா கடந்த 2020 ஜனவரி மாதம் முதல் பதவி வகித்து வந்தார். பா.ஜனதா தலைவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாக இருக்கும் நிலையில், ஜே.பி.நட்டாவின் முழு பதவிக்காலம் 2023-ம் ஆண்டு நிறைவடைந்தது. ஆனால் கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்ததால், அதுவரை ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. பின்னர் அவரது தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடித்தது. பிரதமர் மோடியின் புதிய மந்திரி சபையில் ஜே.பி.நட்டாவுக்கு சுகாதாரத்துறை அளிக்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ஓராண்டு கடந்த பிறகும் பா.ஜனதாவுக்கு புதிய தேசிய தலைவர் நியமிக்கப்படவில்லை. அந்த பொறுப்பில் ஜே.பி.நட்டாவே தொடர்ந்து வருகிறார். அதேநேரம் பா.ஜனதாவுக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பா.ஜனதாவின் தேசிய செயல் தலைவராக பீகார் மாநில பொதுப்பணித்துறை மந்திரி நிதின் நபின் (வயது 45) நேற்று நியமிக்கப்பட்டார். கட்சியின் ஆட்சிமன்றக்குழுவில் ஒருமனதாக அவர் தேர்வு செய்யப்பட்டதாகவும், இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருந்தார். பா.ஜனதா தேசிய செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிதின் நபினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்ட நிதின் நபின், இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா, நட்டா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com