பிரதமர் மோடி - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சுவார்த்தை

ஈரான் மீது இஸ்ரேல் இன்று தாக்குதல் நடத்தியது.
டெல்லி,
இஸ்ரேல் , ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, ஈரானில் உள்ள அணு உலைகள், அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் இன்று அதிகாலை வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் ஈரான் அணு விஞ்ஞானிகள் உள்பட 70 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடியை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் குறித்து பிரதமர் மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எடுத்துரைத்தார். இதையடுத்து, பதற்றத்தை குறைத்து அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு வழிவகுக்கும்படி நெதன்யாகுவை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.