

ஹைதராபாத்,
தேசப்பற்று பாடலான வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழாவை நாடு முழுவதும் கொண்டாடுமாறு பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்டாட்டம் நேற்று முதல் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் நேற்று திருமணம் செய்த ஒரு ஜோடி, மண மேடையிலேயே வந்தே மாதரம் பாடலை ஒலிக்கச் செய்து தங்களது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர். அதுபற்றிய விவரம் வருமாறு:
தெலுங்கானா மாநிலம் வரங்கல் மாவட்டம் ரங்கசாய் பேட்டையை சேர்ந்த போலீஸ்காரர் கோகிகார் ஸ்ரீகாந்துக்கும், லக்ஷ்மி சாயி என்ற பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த கையுடன் மணமக்கள் தங்கள் கைகளில் தேசிய கொடியை ஏந்தியபடி வந்தே மாதரம் பாடலை உணர்ச்சி பூர்வமாக பாடினர். மணமக்களின் பெற்றோர்களும், திருமண விழாவுக்கு வந்திருந்த உறவினர்களும் அந்த பாடலை பாடினர்.
எத்தனையோ திருமண நிகழ்ச்சிகளில் தேவையற்ற நிகழ்வுகள் நிகழும்போது, இவர்களின் இந்த திருமணம் நாட்டுப்பற்றை ஊட்டுவதாக இருந்ததாக மணமக்களை வாழ்த்தியவர்கள் தெரிவித்தனர்.