பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து தவறுதலாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
டெல்லி,
பீகாரில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதனை தொடர்ந்து கடந்த 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இதில், பீகாரில் 7 கோடியே 24 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே இருந்தன. 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.அவர்களில், 22 லட்சத்து 34 ஆயிரம் பேர் இறந்து விட்டதாகவும், 36 லட்சத்து 28 ஆயிரம் பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்து விட்டனர் அல்லது முகவரியில் காணவில்லை என்றும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் சேர்த்து இருப்பதாகவும். அதனால் மேற்கண்ட 65 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணையின்போது நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் வெளியிட்டது.
இந்நிலையில், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து தவறுதலாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. வாக்காளர் பட்டியலில் இருந்து தவறுதலாக நீக்கப்பட்டவர்கள் ஆதார் கார்டு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை ஆவணமாக தேர்தல் ஆணையத்திடம் நேரடியாகவோ? ஆன்லைன் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். சமர்ப்பிக்கப்பட்ட ஆதார் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களின் அடிப்படையில் பெயர் நீக்கப்பட்டவர்களை வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தவறுதலாக விடுபட்ட வாக்காளர்கள் ஆதார் அல்லது 11 ஆவணங்களின் விவரங்களை விண்ணப்ப படிவத்தில் நிரப்ப பொதுமக்களுக்கு உதவ கட்சி தொண்டர்களுக்கு அரசியல் கட்சிகள் உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. மேலும், 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளபோதும் அதுகுறித்து அரசியல் கட்சிகள் வழக்கு தொடராதது ஆச்சரியமாக உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக பீகாரில் 12 கட்சிகளும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட்டு வழக்கை ஒத்தி வைத்தது.






